இப்போது பெரியவர்கள் தங்களுக்காகப் புத்தகங்களை வாங்க வருகிறார்களோ இல்லையோ அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் புத்தகங்களை வாங்க வருகிறார்கள். வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிறார்கள். குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு என நிறைய முயற்சிகள் மேற்கொள்கின்றனர். அவற்றை இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் அரங்குகள் சிலவற்றில் காண முடிந்தது. க்ரோலியர் (எதஞகஐஉத) என்ற நிறுவனம் அமைத்துள்ள அரங்கு அவற்றில் ஒன்று. இந்த அரங்கில் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்காக பலவிதமான புத்தகங்கள், உபகரணங்கள் கிடைக்கின்றன.
ஒரு புத்தகத்தில் உள்ள ஒரு படத்தின் மீதோ, அவற்றில் உள்ள சொற்களின் மீதோ ஒரு பேனா வடிவிலான கருவியின் கூர் முனையை வைத்தால், அந்தக் கருவியில் இருந்து அந்தப் படத்தில் உள்ள விலங்கு, பொருள் ஆகியவற்றின் பெயர் ஒலிக்கிறது. சொற்களின் மீது வைத்தால் சொற்கள் ஒலிக்கின்றன. தனித்தனிச் சொற்கள் மட்டுமல்ல, வாக்கியம் முழுவதும் ஒலிக்கிறது. வழக்கமாக குழந்தைகளின் விரலைப் பிடித்து ஒவ்வொரு எழுத்தாய்த் தொட்டு பெரியவர்கள் சொல்லிக் கொடுப்பதைப் போல அந்த உபகரணம் செயல்படுகிறது. எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் குழந்தைகளுக்கான புத்தகங்கள், புத்தகங்களில் உள்ளவற்றை உச்சரிக்கும் கருவி ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.
இது தவிர, குழந்தைகளின் திறமையை விளையாட்டின் மூலம் வளர்க்க உதவும் விளையாட்டுப் பொருள்களும் உள்ளன. இது குறித்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்த தாமோதரன் நம்மிடம் கூறியதாவது:
குழந்தைகளை டிவியின் கார்ட்டூன் சேனல்கள், குழந்தைகளுக்கான சேனல்களில் இருந்து விடுவிப்பது இன்றைய பிரச்னையாக உள்ளது. அதற்காகத்தான் இம்மாதிரியான கருவிகளை உருவாக்கியிருக்கிறோம். 6 மாத குழந்தைகள் முதல் 10 வயதுக் குழந்தைகள் வரை, அவர்களின் வயதுக்குப் பொருத்தமான அறிவூட்டும் கருவிகளை வடிவமைத்திருக்கிறோம். எனவே பெற்றோர் தமது குழந்தைக்கு எது தேவையானதோ அதை வாங்கிப் பயன்படுத்தலாம். குழந்தைகள் திறமையுடன் வளர, பள்ளியில் ஆசிரியரின் முயற்சிகள் மட்டுமே போதுமானவை அல்ல; வீட்டில் பெற்றோரும் குழந்தைகளின் திறமைகளை வளர்க்க உதவ வேண்டும். அதற்கு உதவுபவையே இந்த கருவிகள் என்றார்.