சென்னை கிண்டியில் தொழிலாளர் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, அந்த துறையின் துணை இயக்குநர் உள்பட இருவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கிண்டி தொழிற்பேட்டையில் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள், அதிகமாக லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அந்த அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர்.
இதில் அந்த அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் ரூ.62,800 ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் அடிப்படையில், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அத்துறையின் துணை இயக்குநர் எஸ்.பாலு (52), உதவி இயக்குநர் பி.சிவக்குமார் (37) ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ் வழக்குத் தொடர்பாக போலீஸார், அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.