சென்னையில் தமிழக முதல்வரின் வாகனத்தின் எதிரே காரை ஓட்டிச் சென்ற இளைஞரிடம் போலீஸார் விசாரணை செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை செல்வதற்காக காமராஜர் சாலை, சாந்தோம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு கார் திடீரென, முதல்வரின் காருக்கு நேர் எதிராக சென்றது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், நிலைமை உணர்ந்து அந்த காரை உடனே அங்கிருந்து ஓரம் கட்டினர்.
மேலும் இது தொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த மௌலிவாக்கம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கி.கௌரிகுமார் (26) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அதையடுத்து மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவு போலீஸார், கௌரிகுமார் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.