சென்னையில் மது போதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக மூன்று இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சென்னை கொரட்டூர் சீனிவாசபுரம் முதல் பிரதான சாலையைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (44). ஆர்.ஏ.புரத்தில் சிறப்புப் பிரிவு சி.ஐ.டி. பாதுகாப்புப் பிரிவில் ஆய்வாளராக உள்ளார். இவர், கடந்த சனிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு, வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.
வடபழனியில் இருந்து கோயம்பேடு நோக்கி 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்புறமாக போக்குவரத்து விதிகளை மீறி வந்தவர்களின் இருசக்கர வாகனம் மகாலட்சுமி மீது மோதியது. இதில், மகாலட்சுமி பலத்த காயமடைந்தார். இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது அரும்பாக்கம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த விஜய் (19), புருஷோத்தமன்(21), நெசப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ் (20) ஆகியோர் என்பதும், மது போதையில் அவர்கள் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.