மாணவர்களின் இலக்கிய அறிவை வளர்க்கும் வகையிலான இலக்கிய இன்பம் என்னும் நிகழ்ச்சி, சென்னை டி.ஜி.வைணவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ்க் காப்பியங்கள்', காளமேகப் புலவர்', எனக்குப் பிடித்த பாரதியார்' உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாற்றினர். இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் ராம.கணேசன் பேசியது: உலகில் தோன்றிய முதல் மொழியாகத் திகழும் தமிழ் மொழியை பத்து சதவீதத்துக்கும் அதிகமானோர் பேசுகிறார்கள். தமிழை யாராலும் ஒதுக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்றார்.
கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முருகன் கூறியது: நாட்டு நலப் பணித் திட்டத்துக்கு 63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களுமே முன்னோடிகளாக விளங்குகிறார்கள். 63 நாயன்மார்கள் வாழ்ந்த இடத்துக்குச் சென்று அவர்கள் ஆற்றிய சமுதாயப் பணிகள் குறித்து பெரிய புராணத்தில் சேக்கிழார் பதிவு செய்துள்ளார் என்றார்.