சென்னை ஓட்டேரியில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பெரம்பூர் செல்வவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கி.புருஷோத்தமன் (26). இவர் ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் சனிக்கிழமை காலை தனது மோட்டார் சைக்கிளில் ஓட்டேரி மேட்டுப்பாளையம் ரயில்வே சுரங்கப் பாதையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர், புருஷோத்தமனை வழிமறித்து தாக்கி, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, பணப்பை, விலை உயர்ந்த செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
இது குறித்து ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.