மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை: மே மாதத்தில் 45 ஆயிரம் பேர் பயணம்
மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவைகளை கடந்த மாதத்தில் 45,494 பேர் பயன்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளை ஷேர் ஆட்டோக்கள் மூலமாகவும், ஷேர் டாக்ஸிகள் மூலமாகவும் குறிப்பிட்ட போக்குவரத்து இணைப்புப் பகுதிக்கு அழைத்துச் செல்லும் சேவை சோதனை முயற்சியில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பரங்கிமலை ஆகிய பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று எழும்பூர், ஏஜி-டிஎம்எஸ், அண்ணா நகர் கிழக்கு, கோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் டாக்ஸி சேவை உள்ளது. குறிப்பிட்ட போக்குவரத்து முனையத்துக்கு அழைத்துச் செல்ல ஷேர் ஆட்டோக்களில் ரூ.5-உம், டாக்ஸியில் ரூ.10-உம் கட்டணங்களாக வசூலிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த மே மாதத்தில் அந்த இரு சேவைகளையும் 45, 494 பேர் பயன்படுத்தியுள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக 38,206 பேர் ஆட்டோக்களில் பயணித்துள்ளனர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.