அம்பத்தூரில் எக்ஸ்பிரஸ் கேண்டீன்: அமைச்சர் பென்ஜமின் திறந்து வைத்தார்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஹோட்டல் ஆனந்தாவின் "எக்ஸ்பிரஸ் கேண்டீனை' ஊரகத் தொழில்துறை அமைச்சர் பி.பென்ஜமின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டையின் 2-ஆவது பிரதான சாலையில் உள்ள எக்ஸ்பிரஸ் கார்டனில் ஹோட்டல் ஆனந்தா சார்பில் எக்ஸ்பிரஸ் கேண்டீன் என்ற சைவ உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தின் திறப்பு விழா அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமிமேனன் தலைமை வகித்தார். அமைச்சர் பி.பென்ஜமின் கலந்துகொண்டு உணவகத்தைத் திறந்து வைத்து பேசியதாவது:
அம்பத்தூர் தொழிற்பேட்டையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த உணவகத்தின் மூலம், இங்கு பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமின்றி, இந்தப் பகுதியில் பணியாற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் தரமான உணவு கிடைக்க வழிவகை செய்யும் என்றார் அவர்.
உணவகத்தின் நிர்வாக பங்குதாரர்களான ஆர்.நாராயணன் மற்றும் பி.ஸ்ரீராம் கூறுகையில், இந்த உணவகம் இரண்டு தளங்களைக் கொண்டது. கீழ்தளத்தில் 72 பேர் அமர்ந்து உணவருந்தவும், குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட முதல் தளத்தில் 54 பேர் அமர்ந்து உணவருந்தவும் முடியும்.
மேலும் இந்த உணவகத்தில், தென்னிந்திய உணவுகளான மதிய சாப்பாடு, கலவை சாதங்கள், இட்லி, தோசை மட்டுமின்றி, வட இந்திய உணவு வகைகளும், இந்தோ-சைனீஸ் உணவு வகைகளான பிரைடு ரைஸ்,நூடுல்ஸ், புலாவ், பன்னீர் பட்டர் மசாலா, மற்றும் ஐஸ் கிரீம், பழ ரசங்கள் உள்ளிட்டவைகளும் கிடைக்கும். திருநெல்வேலி மற்றும் தென் தமிழகத்தைச் சேர்ந்த சமையலர்கள் சமையல் பணிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
விழாவில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சட்டப் பிரிவு பொதுமேலாளர் என்.கோபாலன், மின்னணு மற்றும் தகவல் தொடர்புப் பிரிவின் துணைத் தலைவர் என்.ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.