9 எஸ்.பி.க்கள் டி.ஐ.ஜிகளாக பதவி உயர்வு
தமிழக காவல்துறையில் காவல் கண்காணிப்பாளர்களாக (எஸ்.பி) பணி புரியும் 9 பேர் டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு பெற்றனர்.
தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கண்காணிப்பாளர் (எஸ்பி) பணியில் பத்து ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னர் டிஐஜி பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, தமிழக காவல்துறையில் கடந்த 2006-ஆம் ஆண்டு எஸ்.பி. களாக பணி அமர்த்தப்பட்ட 9 பேருக்கு, 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் டிஐஜி பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அந்த 9 எஸ்பிக்களுக்கும் டிஐஜி பதவி உயர்வு வழங்கி தமிழக உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி தற்போது எஸ்பிக்களாக இருந்த அபிஷேக் தீக்ஷித், எஸ்.மல்லிகா, பி. சாமுண்டீஸ்வரி, எஸ். லெட்சுமி, எஸ். ராஜேஸ்வரி, எம்.பாண்டியன், எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ்.முத்துசாமி, என்.எம்.மயில் வாகனன் ஆகியோர் டிஐஜிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் விரைவில் டிஐஜி பணியிடங்களில் நியமிக்கப்படுவார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.