சென்னை அருகே மோட்டார் சைக்கிளும், வேனும் மோதிய விபத்தில் சிறப்புக்காவல் படை காவலர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை நீலாங்கரை அருகே உள்ள பனையூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சுயம்பு மகன் நெல்சன் (24). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் தில்லி திகார் சிறையில் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.
சில நாள்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான பனையூருக்கு நெல்சன் வந்தார். இவர், மோட்டார்சைக்கிளில் பனையூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சோழிங்கநல்லூரில் இருந்து அக்கரை நோக்கி கே.கே. சாலையில் திங்கள்கிழமை சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் நெல்சன் பலத்த காயமடைந்தார், உடன் சென்ற பெண் லேசான காயமடைந்தார். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இருவரையும் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து, நெல்சன், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து, அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.