சென்னை, மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள திரைப்பட வெளிப்புறப் படப்பிடிப்பு தளத்தில் வியாழக்கிழமை நேரிட்ட தீவிபத்தில் பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த
30 -க்கும் மேற்பட்ட அரங்குகள் தீப்பற்றி எரிந்து நாசமாயின. அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
மீனம்பாக்கத்தில் பின்னி நூற்பாலை இயங்கி வந்த 50 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில், பிரமாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு தற்போது ஏராளமான தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்பட வெளிப்புறப் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வியாழக்கிழமை திரைப்படப் படப்பிடிப்புக்கென அரங்கு அமைக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெல்டிங் பணி நடைபெற்றுக் கொண்டு இருந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த அனைத்து ஊழியர்களும் அந்த இடத்தை விட்டு விரைந்து வெளியேறினர்.
இதனிடையே , அருகில் அமைக்கப்பட்டு இருந்த செட்டுகளுக்கு தீப்பிழம்பு வேகமாகப் பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்புப் படையினர் தாம்பரம், கிண்டி தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் படப்பிடிப்புக்காக பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அரங்குகள் எரிந்து நாசமாயின. இந்த வெளிப்புறப் படப்பிடிப்புத் தளத்தில் போதிய தீயணைப்பு சாதனங்கள் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தீ விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் மின் இணைப்பு சில மணி நேரம் துண்டிக்கப்பட்டது.