இந்தியாவை நவீனமயமாக்க கணினியை அறிமுகப்படுத்தியவர் ராஜீவ் காந்தி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை அவரது உருவப்படத்துக்கு கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஒரு நிமிஷம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியது:
இந்தியாவின் மாபெரும் பிரச்னைகளை எல்லாம் தீர்த்து வைத்தவர் ராஜீவ் காந்தி. சீக்கியர் பிரச்னை, பஞ்சாப் பிரச்னை, அஸ்ஸாம் பிரச்னை எல்லாவற்றுக்கும் தீர்வு கண்டவர்.
மாலத்தீவில் கிளர்ச்சி செய்த ஆயுத கும்பலுக்கு எதிராக இந்திய ராணுவத்தை அனுப்பி, அங்கு அமைதியை ஏற்படுத்தியவர். ஆப்பிரிக்காவின் வறுமையை நீக்குவதற்காக ஆப்பிரிக்க நிதியம் என்ற ஒன்றை ஏற்படுத்தி ஆப்பிரிக்க மக்களுக்கு உதவியவர். இந்தியாவை நவீனமயமாக்க கணினியை அறிமுகப்படுத்தியவர். கொலைக்காரக் கும்பலால் கொல்லப்பட்டது வருத்தத்துக்குரியது என்றார். இதைத் தொடர்ந்து, அண்ணாசாலை தர்காவிலிருந்து சத்தியமூர்த்தி பவன் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.
மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, டாக்டர் செல்லகுமார், மாநிலப் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
சண்டி யாகம்: இதற்கிடையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் செவ்வாய்க்கிழமை சண்டியாகம் நடத்தப்பட்டது.