சென்னை மாம்பலத்தில் காவலர்களுக்குள் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை மாம்பலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிபவர் சம்பத். இவருக்கும், அந்த காவல் நிலையத்தில் காவலர்களாகப் பணிபுரியும் சதீஷ்குமார், சிவபாலன், மனோஜ், விஜய் கார்த்திக் ஆகியோருக்கும் இடையே ஒரு புகாரை விசாரிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் அண்மையில் 4 காவலர்களுக்கும், ஆய்வாளர் சம்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் காவலர்கள், ஆய்வாளர் சம்பத்தை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சம்பத், தெற்கு மண்டல இணை ஆணையர் சி.மகேஸ்வரிடயிடம் புகார் செய்தார். அதேபோன்று காவலர்களும் புகார் செய்தனர்.
இரு புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், முதல் கட்டமாக 4 காவலர்களும் காத்திருப்போர் பட்டியலுக்கு கடந்த 24-ஆம் தேதி மாற்றப்பட்டனர். இந்தநிலையில் ஆய்வாளர் சம்பத்தை தெற்கு மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி தே.க.ராஜேந்திரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.