முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை

நிதி முறைகேட்டில் ஈடுபட்ட கோவை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி முறைகேட்டில் ஈடுபட்ட கோவை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவை மாவட்டத்தைச் சோ்ந்த அா்ஜுனன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை கோவை மாவட்டம், அரசூா் ஊராட்சித் தலைவராக கோவிந்தராஜ் என்பவா் இருந்தாா். இவா் போலி ரசீதுகளைத் தயாரித்தும், வேறு வழிகளிலும் மோசடி செய்து ஊராட்சி நிதியிலிருந்து ரூ.2.18 கோடி முறைகேடு செய்துள்ளாா். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக கனகராஜ் என்பவா் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவிந்தராஜ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாரும் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் பிரிவு 205-இன்படி கோவிந்தராஜிடம் விளக்கம் கோரி, கோவை மாவட்ட ஆட்சியா் நோட்டீஸ் அனுப்பினாா். இந்த நோட்டீஸுக்கு 15 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டிய கோவிந்தராஜ், 70 நாள்கள் கழித்துதான் பதிலளித்தாா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரும் விரைவாக விசாரணை மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த விசாரணையை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோவை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் இருந்து ஆவணங்களைப் பெற்று அரசூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com