சென்னை உயர்நீதிமன்றத்தில் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், தீவிரவாத தாக்குதல்களை எதிர் கொள்ளும் வகையில் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை அவ்வபோது நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை திங்கள்கிழமை நடைபெற்றது.இந்த பாதுகாப்பு ஒத்திகையில், தேசிய பாதுகாப்புப் படையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், கமாண்டோ வீரர்கள், சென்னை காவல்துறையின் அதிரடிப்படை வீரர்கள் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவலர்கள் பங்கேற்றனர். அதில், உயர்நீதிமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முயல்வது போலவும், பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தடுத்து கைது செய்வதுபோலவும் ஒத்திகை நடத்தப்பட்டது. ஒத்திகையின்போது, காவலர்கள், தங்களது துப்பாக்கிகளில் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தினர். ஒத்திகையின் காரணமாக, உயர்நீதிமன்றம் சிறிது பரபரப்புடன் காணப்பட்டது.