சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் என்சிஇஆர்டி பாடங்களை அடிப்படையாக கொண்டு நடைபெறாது. மாறாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்படிதான் நடைபெறும் என சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு பொதுத் தேர்வும், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் என்சிஇஆர்டி தயாரித்துள்ள பாட நூல்களை அடிப்படையாக கொண்டுதான் நடக்கும் என்று நாடு முழுவதும் வதந்தி பரவியுள்ளது.
இதனால், சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பத்தைப் போக்க தற்போது சிபிஎஸ்இ தரப்பினர் மாநில வாரியாக விளக்கம் அளித்து வருகின்றனர். அதன்படி மேற்கண்ட தேர்வுகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி பாடங்களின்படி நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற குழப்ப நிலை உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சிபிஎஸ்இ, அனைத்து இணைப்பு பெற்றுள்ள பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் தேர்வுக்கான சிபிஎஸ்இ பாடத் திட்டத்தையும் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது. இந்தப் பாடத் திட்டத்தை அனைத்து மாணவ, மாணவியரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், சுற்றறிக்கை அனுப்புவதற்கான நேரம் இதுவல்ல. பெரும்பாலான பள்ளிகளுக்கு இந்த தகவல் வந்து சேரவில்லை. அது இணையதளத்தில் மட்டுமே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சிபிஎஸ்இ நிர்வாகம் இதுபோன்ற சுற்றறிக்கைகளையோ அல்லது அறிக்கைகளையோ அல்லது தகவல்களையோ பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை என்று சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.