சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம் மலைக்கோயில் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் 9 அடி உயர ராகு பகவான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ராகு, கேது தோஷமுள்ளவர்கள், திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை ஆகிய குறைகளுடன் இருப்பவர்கள் ஆலயத்திற்கு நேரில் வந்து பரிகார பூஜை செய்து வழிபட்டால் குறைகள் தீரும் என்பது சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்ட கால நம்பிக்கையாக உள்ளது. நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றித் தரும் துர்க்கையம்மன் ஆலயத்தில் வேறு எங்கும் இல்லாத அளவில் மிக உயரமான ராகு பகவான் சிலை அமைக்க பக்தர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் முடிவு செய்தனர். ரூ 10 லட்சம் செலவில் 9 அடி உயர ராகு பகவான் சிலையை நிறுவி, கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராகு,கேது பகவானுக்கு யாகபூஜை செய்து, வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.