சென்னையில் இருந்து ரயில் மூலம் உரிய ஆவணமின்றி ஒரு கிலோ தங்கக்கட்டிகளை எடுத்துச் செல்ல முயன்ற நபரை, ரயில்வே போலீஸார் பிடித்துத் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.
மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் குற்றங்களைத் தடுக்கும் வகையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட தமிழக ரயில்வே காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி, ரயில்வே டிஎஸ்பி. எட்வர்ட் மேற்பார்வையில் ரயில்வே போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்ட்ரல் ரயில்நிலையத்தின் 5-ஆவது நடைமேடையில், புதன்கிழமை பிற்பகலில் புறப்படத் தயாராக இருந்த பினாக்கினி விரைவு ரயில் பயணிகளை ரயில்வே போலீஸார் கண்காணித்தனர்.
அப்போது,அந்த ரயிலில் ஏற வந்த சந்தேகத்துக்குரிய நபரை அழைத்து, அவரது பையை சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது.
மேலும், அந்த நபர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஆனந்த்(22) என்பதும், சென்னை வால்டாக்ஸ் சாலையில், ஒரு நபரிடம் தங்கக்கட்டியை வாங்கி, குண்டூரில் உள்ள நபரிடம் கொடுப்பதற்காக எடுத்துச் செல்வதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆனந்திடமிருந்து தங்கக்கட்டிகளைப் பறிமுதல் செய்து பறக்கும்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.