மக்களவைத் தேர்தலையொட்டி, காவல்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை பணியில் இருக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 16-ஆம் தேதி மாலையோடு பிரசாரம் நிறைவு பெறுகிறது.
அதேவேளையில், கடைசி நேரத்தில் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் இருப்பதாக காவல்துறையினர் கருதுகின்றனர்.
இதையடுத்து சென்னையில் தேர்தல் பிரசாரத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நெறிமுறைகளை மீறும் அரசியல் கட்சியினர் மீது உடனடியாக வழக்குப் பதியப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நகரில் ஹோட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீஸார் திடீர் சோதனைகளை நடத்துகின்றனர்.
நள்ளிரவு வரை பணி: அதேபோல நகரின் முக்கியமான பகுதிகளில் போலீஸார் தீவிர வாகனச் சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் முடியும் வரை சென்னை பெருநகரக் காவல்துறையில் பணியாற்றும் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் கண்டிப்பாக நள்ளிரவு 12 மணி வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் சென்னையின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த முடியும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆய்வு: காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், ராயபுரம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்தார். அந்த வாக்குச் சாவடிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.