எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு , தமிழக அரசு, உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆகியோர் வரும் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இதே போல, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கக் கோரி கடந்த 2012-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பான கருத்துகளை தமிழக அரசுக்கு அனுப்ப உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, திண்டுக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையின்
படி சிறப்பு நீதிமன்றங்களை மூன்று கட்டங்களாக அமைப்பதாக தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. அரசாணை பிறப்பித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. எனவே, சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோரை கொண்ட அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு, உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் ஆகியோர் ஏப்ரல் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.