சென்னையில் லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் சுரேஷ்குமார். இவரிடம் நிலம் அபகரிப்பு தொடர்பான ஒரு புகார் அண்மையில் விசாரணைக்கு வந்தது. ஆனால், அந்தப் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காமல் அப்படியே வைத்திருந்தாராம். இதே புகார் மனு, சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஆர்.தினகரனிடம் சில நாள்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது. அப் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க மாதவரம் குற்றப்
பிரிவு போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆய்வாளர் சுரேஷ்குமார் மீண்டும் விசாரணை செய்தார். ஆனால் நடவடிக்கை எடுக்க சுரேஷ்குமார், புகார்தாரரிடம் "ஐ-போன்' மற்றும் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து, பெருநகர காவல்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை செய்தனர். இதில், ஆய்வாளர் சுரேஷ்குமார் புகார்தாரரிடம் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதாம். இதையடுத்து, ஆய்வாளர் சுரேஷ்குமாரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து கூடுதல் காவல் ஆணையர் ஆர்.தினகரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். மேலும், சுரேஷ்குமார் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.