கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னையில் கடந்த 6 மாதங்களாக மழை இல்லாததால் கொசு உற்பத்தி குறைந்து இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதன் காரணமாக தற்போது கொசு உற்பத்தி அதிகரித்ததோடு, கொசுத் தொல்லை தொடர்பாக மாநகராட்சிக்கு வரும் புகார்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கொசுக்களை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சியின் துணை ஆணையர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: முதல்கட்டமாக மாநகராட்சி முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்களைக் கண்காணித்து, அவற்றில் தேங்கும் நீரை முறையாக வடியச் செய்வது, அவற்றில் புகை மருந்து அடித்து முதிர் கொசுக்களை அழிப்பது போன்ற நடவடிக்கைகளை தொடங்குமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் போன்றவற்றில் கொசு உற்பத்தி மற்றும் அவற்றின் அடர்த்தி குறித்து கண்காணிக்குமாறு பூச்சியியல் வல்லுநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றனவா என்பது குறித்தும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.