கட்டாய ஓய்வுத் திட்டம்: உத்தரவை வெளியிட்டது ரயில்வே வாரியம்

கட்டாய ஓய்வுத் திட்டம்: உத்தரவை வெளியிட்டது ரயில்வே வாரியம்

முப்பது ஆண்டுகள் பணி முடித்த அல்லது 55 வயது நிறைவு பெற்ற ரயில்வே ஊழியர்களின் பணித்தகுதியை ஆய்வு செய்து, கட்டாய ஓய்வு வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. 

முப்பது ஆண்டுகள் பணி முடித்த அல்லது 55 வயது நிறைவு பெற்ற ரயில்வே ஊழியர்களின் பணித்தகுதியை ஆய்வு செய்து, கட்டாய ஓய்வு வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. 
இதற்காக 13 பக்க உத்தரவை ரயில்வே வாரிய இணை இயக்குநர் என்.பி.சிங் வியாழக்கிழமை (ஆக.8) வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: 
இந்தக் கட்டாய ஓய்வுத் திட்டம் அனைத்து ஏ, பி மற்றும் சி குரூப் மற்றும் டி பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கும்  பொருந்தும். இதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்படவுள்ளது. எத்தனை ஊழியர்கள் கட்டாய பணி ஓய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்கள், எத்தனை ஊழியர்கள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்கள் என்ற விவரங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தெரியப்படுத்த வேண்டும். இது, அடிப்படை விதிகள் 1972 பிரிவு(ஜெ) மற்றும் 48 கீழ் நிர்வாகத்தைப் பலப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். 
அடிப்படை விதிகள் 1972 பிரிவு 56 (ஜெ)-இன் கீழ், நோட்டீஸ் வழங்காமல் பணி ஓய்வு நடவடிக்கைகளை எடுக்க  தடையில்லை என்று ஏற்கெனவே ஒரு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட இந்த உத்தரவுகளின்படி 30 ஆண்டுகள் பணி முடித்த அல்லது 55 வயதான பணித்தகுதி இல்லாத ரயில்வே ஊழியர்கள் நோட்டீஸ் கொடுத்து மூன்று மாதங்கள் கழித்தோ அல்லது மூன்று மாத ஊதியம் மற்றும் படிகள் கொடுத்து உடனடியாகவோ கட்டாயப் பணி ஓய்வு வழங்கலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் தற்போது  12 லட்சத்து 46 ஆயிரத்து 500 ஊழியர்கள் உள்ளனர். இந்தப் புதிய உத்தரவால், இந்திய அளவில் 3 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தெற்கு ரயில்வேயைப் பொருத்தவரை 18 ஆயிரம் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும். 
கட்டாய ஓய்வு வழங்கும் திட்டத்தை ரயில்வே வாரியம் உடனே  ரயில்வே வாரியம் உடனே கைவிட வேண்டும் என்று தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறியது: இந்தத் திட்டத்தால், அனுபவமிக்க ஊழியர்களின் ஆலோசனைகளை இழக்க நேரிடும். அதிகாரிகளின் செயல்களுக்கு துணை போகாத நேர்மையான பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் பழி வாங்கப்படுவார்கள். தொழில் அமைதியைச் சீர்குலைக்கும். எனவே, பணித்தகுதியைக் காரணம் காட்டி ரயில்வே ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் திட்டத்தை ரயில்வே வாரியம் கைவிடவேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com