இந்தியா முழுவதும் இயக்குவதற்காக "ஃபேம் இந்தியா' திட்டத்தின் கீழ் 5,595 மின்சாரப் பேருந்துகள் வழங்கப்படும் என மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 525 மின்சாரப் பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான திட்ட அறிக்கையை மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் கோரியிருந்தது.
இதில், 26 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து 14,988 பேருந்துகளை இயக்க விருப்பம் தெரிவித்தன. இதைப் பரிசீலித்த மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், 64 நகரங்களுக்கு 5,095 பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கியது. இதே போல் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு பயன்படுத்த 400 மின்சாரப் பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு தலா 100 பேருந்துகளும், ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூருக்கு தலா 50 பேருந்துகளும், தஞ்சாவூருக்கு 25 பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரத்துக்கு 725 பேருந்துகளும், ஒடிஸாவுக்கு 30 பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. இப்பேருந்துகள் ஒப்பந்த காலகட்டத்தில் 400 கோடி கி.மீ தூரத்துக்கு இயக்க முடியும் எனவும் 120 கோடி லிட்டர் எரி பொருள் சேமிக்கப்படுவதோடு 260 கோடி டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடுவது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.