சென்னை அருகே தொழிலதிபரைக் கடத்தி தாக்கி பணத்தை பறித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரவாயல் அருகே உள்ள வானகரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (49). தொழில் அதிபரான இவர், மாதவரம் அடுத்த வட பெரும்பாக்கத்தில் மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வட பெரும்பாக்கத்தில் இருந்து வீட்டுக்கு தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் புழல் சுங்கச்சாவடியைத் தாண்டி வந்தபோது, அங்கு மோட்டார் பைக்குகளில் வந்த ஒரு கும்பல் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ.1.58 லட்சத்தை பறித்தது. பின்னர், அவரை காருடன் பழவேற்காட்டுக்கு கடத்திச் சென்று சித்ரவதை செய்தபின், அந்தக் கும்பல் கிருஷ்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு, காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றது. இது குறித்த புகாரின்பேரில் புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
காவல் ஆய்வாளர் ஜவஹர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், தொழிலதிபரை கடத்தி, பணம் பறித்ததாக மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் (26), ராஜ்குமார் (27), சிவா (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை (35) என்பவரைத் தேடி வருகின்றனர்.