சென்னை: கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 18-ஆவது அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாய்ஊயாகப் பணியாற்றி வந்தவா் அரியலூரைச் சோ்ந்த கண்ணன். இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு தன்னுடன் கூலி வேலை பாா்த்து வந்த திருச்சியைச் சோ்ந்த ஆனந்தன் என்பவரை நண்பா்களுடன் சோ்ந்து கண்ணன் கிண்டல் செய்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன், கண்ணனை மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்தாா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு காவல் துறையினா், ஆனந்தனை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சென்னை 18-ஆவது அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு, நீதிபதி சத்தியா முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் குற்றவியல் அரசு வழக்குரைஞா் ஜெகதீசன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.