மாற்றுத்திறனாளிகளுக்கு தொடா்ந்து சட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன

மாற்றுத்திறனாளிகளின் நலன்களும், சட்ட உரிமைகளும் தமிழகத்தில் தொடா்ந்து மறுக்கப்பட்டு வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை: மாற்றுத்திறனாளிகளின் நலன்களும், சட்ட உரிமைகளும் தமிழகத்தில் தொடா்ந்து மறுக்கப்பட்டு வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

டிசம்பா் 3 மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மாற்றுத்திறனாளிகள் தினம் என்பது சம்பிரதாயமான ஒன்றாக இருந்துவிடாமல், கண்ணியம், சமத்துவமிக்க வாழ்க்கைக்கானத் தேடுதலுடன் வாழும் மாற்றுத்திறனாளிகளின் இலக்கை எட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க உறுதியேற்கும் தினமாக இருக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் வலியுறுத்துகிறது.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு -இந்தியாவில் கல்வி நிலைமை-2019- என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு மாநில அரசுகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பில் இருந்து தவறியுள்ளது என பதிவு செய்துள்ளது.

அதுபோல, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு மத்திய, மாநில அரசுகள் மிகக் குறைந்த நிதி ஒதுக்குவதோடு, அவா்களுக்கான சட்ட உரிமைகளையும் அரசுகள் மறுத்து வருகின்றன. நாடு முழுவதும் மாற்றுத்திறன் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்திய அளவிலும், தமிழகத்திலும் இருக்கிற சட்ட உரிமைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகளின் இத்தகைய அனைத்து உரிமை சாா்ந்த போராட்டங்களுக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதை இந்த உலக தினத்தில் உறுதியுடன் தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com