சென்னையில் காரில் சென்ற மருத்துவரிடம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை முகப்பேர் கிழக்கு 5-ஆவது பிளாக் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் லோகேஷ் கிருஷ்ணன். இவர், புரசைவாக்கத்தில் கிளினிக் நடத்தி வருகிறார். கிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து, வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் அவர் சென்று கொண்டிருக்கும்போது, காரை மறித்து ஒரு மோட்டார் சைக்கிள் நின்றது. அதில் வந்த நபர்கள், காரை விட்டு கீழே இறங்குமாறு கிருஷ்ணனை கூறியதாகத் தெரிகிறது.
ஆனால் கிருஷ்ணன், அங்கிருந்து காரை எடுக்க முயன்றாராம். உடனே அந்த நபர்கள், கிருஷ்ணனின் கார் கண்ணாடியை உடைத்து, அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.