லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய ஓவியங்களை வைக்க அனுமதியளித்த கல்லூரி முதல்வர் மற்றும் ஓவியம் வரைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாமோதரன் தாக்கல் செய்த மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் கடந்த ஜனவரி 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் ஓவியக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் பாரதப் பிரதமர் மற்றும் இந்து கடவுள்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஓவியங்களுக்கு கண்டனம் எழுந்ததையடுத்து, கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரியது.
இந்து, கிறிஸ்தவ மக்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய ஓவியங்களை வைக்க அனுமதியளித்த கல்லூரி முதல்வர் மீது குற்ற நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், ஓவியங்களை வரைந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் மன்னிப்புக் கோரியதால், புகாரை முடித்து வைத்ததாகப் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்த கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.