அரசுப் பொதுத் தேர்வு மற்றும் திட்டப்பணிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களை நியமனம் செய்து அதன் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், நிகழாண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள அனைத்து அரசுப் பொதுத் தேர்வுகளின் பணிகள் மற்றும் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் கண்காணிப்பு அதிகாரிகளாக பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் பாஸ்கர சேதுபதி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் சசிகலா, ஈரோடு மாவட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் நாகராஜ முருகன், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் கோபிதாஸ் என மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.