சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம், எம்ஆர்ஐ/ சி.டி. ஸ்கேன் - காத்திருப்போர் அறை, ஒட்டுறுப்பு நுண் அறுவை சிகிச்சை பயிற்சி மையம் உள்ளிட்டவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை ஆணையர் மரு. பீலா ராஜேஷ், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவ அதிகாரி டாக்டர் உமா, தொடர்பு அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
ஓமந்தூரார் மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் இயங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக அம்மா முழு உடல் பரிசோதனைக்கு வருபவர்களுக்கும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்காக சிறப்பு வாழ்வியல் மையம் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு யோகா மருத்துவம், அக்குபஞ்சர் முறைகள், நறுமண சிகிச்சை, உணவு மருத்துவம், நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, காந்த சிகிச்சை போன்றவை அளிக்கப்படுகின்றன.
அதுமட்டுமன்றி, ஸ்கேன் மையம் அருகே புதிதாக காத்திருப்போர் அறையும், நுண்அறுவை சிகிச்சைக்கான பயிற்சி மையமும் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.