இருப்போர் கொடுக்கலாம்... இல்லாதோர் எடுக்கலாம்... தேனியில் அன்புச் சுவர்

அன்பே சிவம் , அன்பே சத்தியம், அன்பே நித்தியம், அன்பே ஆனந்தம், அன்பே பேரின்பம், அன்பே அனைத்துமாகும். அன்பினால் அடையமுடியாதது எதுவுமே இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதும் அன்பு மயமானது.
இருப்போர் கொடுக்கலாம்... இல்லாதோர் எடுக்கலாம்... தேனியில் அன்புச் சுவர்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...

அன்பே தெய்வம்...அன்பே சத்தியம்...

அன்பே சிவம் , அன்பே சத்தியம், அன்பே நித்தியம், அன்பே ஆனந்தம், அன்பே பேரின்பம், அன்பே அனைத்துமாகும். அன்பினால் அடையமுடியாதது எதுவுமே இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதும் அன்பு மயமானது. அன்புதான் கணவன், மனைவியரிடையே தூய புனித காதலாக உருவாகிறது.

அன்பிருக்குமானால் அங்கு அச்சம் இருக்க வழியில்லை. மதிப்பும் மரியாதையும், பண்பாட்டை வளர்ப்பதற்கு மிக, மிக இன்றியமையாதவை. பண்பாடு நம்மிடம் உருக்கொண்டபிறகு அதன் காரணமாக அமைதியும் சாந்தமும் மிக்க அன்பினை உள்ளம் சுவைத்து மகிழ்கிறது. உள்ளத்தில் மகிழ்ச்சி மிக்கவர்களே முயற்சியுடையவர்களாவர்.

பிரதிபலனையும், மறுஉதவியையும் எதிர்பார்க்கும் இடத்தில் அன்பை காணமுடியாது. அன்பு அச்சமறியாது. மனதில் அச்சம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது.

'அன்பு செய்" எல்லாவற்றிலும் மிகவும் உயர்வானதையே விரும்பு. இப்போது கீழ்மையான மற்றவை எல்லாம் தானே அகன்றுவிடும்.

என்ன தான் நாம் விஞ்ஞான வளர்ச்சிகளை எட்டிக் கொண்டிருந்தாலும் நம்மை மற்ற உயிர்களிடத்து பிரித்து காட்டுவது நாம் காட்டும் அன்பும் ஈகையும் ஆகும். பெறுவதில் மட்டும் இன்பம் என்று நாமும் எண்ணிக்கொண்டு இருந்தோம். ஆனால் கொடுப்பதிலும் தான் இன்பம் இருக்கின்றது என்று நாம் தற்போது உணர்ந்து வருகின்றோம். அன்பில்லாத இடம் உண்டா என்ன? தூணிலும் இருக்கின்றான்.துரும்பிலும் இருக்கின்றான் அந்த பரமன். பரமனுக்கு அன்பு தானே பிடிக்கும். இதனை தான் கந்த குரு கவசமும் ஆழத்தில் அன்பை பிடிக்க சொல்கின்றது.

 அகந்தையெலாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்புமயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பைஎன் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய்
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும்; அன்பே சக்தியும்
அன்பே ஹரியும்; அன்பே பிரம்மனும்
அன்பே தேவரும்; அன்பே மனிதரும்
அன்பே நீயும்; அன்பே நானும்
அன்பே சத்தியம்; அன்பே நித்தியம்
அன்பே சாந்தம்; அன்பே ஆனந்தம்

அன்பே மௌனம்; அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும்; அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா

நம் பாட்டன்,முப்பாட்டன்,சித்தன் போன்றோரெல்லாம் சும்மா ஒன்னும் எழுதி வைத்து செல்லவில்லை. நமக்கு என்ன தேவையோ அதைத் தான் உணர்ந்து நமக்கு சொல்லி சென்றுள்ளார்கள். நாம் தான் அவற்றை உதாசீனப்படுத்தி வருகின்றோம்.எத்துனை முறை கந்த குரு கவசம் படித்திருப்போம். வெறும் வாய் முணுமுணுத்து ஒன்றும் ஆகிவிட போவதில் என்ன பயன்? மனம் முணுமுணுக்க வேண்டும்.அப்போது தான் அன்பின் ஆழம் நமக்கு புரியும்.

அன்பின் ஆழம் தெரியாததால் தானே தினசரிகளில் மனம் கனக்கும் நிகழ்வுகள் கண்டு வருகின்றோம்.இதற்கு நாம் என்ன செய்ய போகின்றோம். ஏதேனும் ஒரு ஊரை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு தீமை அதிகம் ஏற்பட காரணம் அன்பின்மையே..இந்த தீமையிடம் நாம் அன்பு செலுத்த வேண்டும்.இப்படி அன்பு செலுத்த செலுத்த தீமையின் அழ;அளவு குறைந்து நன்மை பெருகும்.நாம் என்ன தான் ஊர் நல்லா இருக்க வேண்டும் , உலகம் நல்லா இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். ஆனால் சமுதாயத்தில் எத்தனை சீர்கேடுகள் நடைபெற்று வருகின்றன? இதற்கெல்லாம் நாமும் ஒரு வகையில் காரணம். தனிமனித ஒழுங்கற்ற எண்ணங்களின் தொகுப்பே தற்போது நடைபெற்று வரும் சமுதாய சீர்கேடுகளுக்கு காரணம். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். அன்பு செலுத்த வேண்டும். முதலில் உங்களில் அன்பு செலுத்துங்கள். இந்த அன்பு பின்பு மற்றவர்களிடம் செல்லும்.

பிறரிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கும் பொது பெறுவதிலிருந்து கொடுப்பதற்கு நாம் உயர்வோம். கொடுக்கும்போது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அளவிலாத ஒன்றாகும்.தன்னிடம் இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பதில் மனித மனங்களில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி அள விட முடியாதது ஆகும். இருப்பினும் அது போன்ற மகிழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் பல மனிதர்கள் தவித்து வருகின்றனர். பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும் போட்டி உலகத்தில் தங்களது முழு நேரத்தையும் செலவிடுவதால் பசிக்கின்றவருக்கு உணவு வழங்கிடவும், தேவை அறிந்து பொருள் உதவி செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை நினைத்து ஏங்குபவர்களுக்காக  தேனியில் ‘அன்புச் சுவர்’ ஒன்று ஏற்படுத்தப் பட்டுள்ளது.

தேனியில் உள்ள ந. அ .கொண்டுராஜா உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 
2010 ஆம் ஆண்டு மாணவர்களான திருப்பதி ராஜன், நிர்மல் ராஜ்,குரு பிரசாந்த்,மனோ மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து  பலவித உதவிகளை வெளியே தெரியாத வண்ணம்  செய்து வருகின்றார்கள்.அவர்களின் புதிய முயற்சியே இந்த அன்புச் சுவர். இந்த அன்புச் சுவர் திட்டம் பல ஊர்களில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.தேனியில் இங்கு மட்டுமே உள்ளது. நாம் கடந்த முறை தேனிக்கு சென்ற போது ஏதோ சும்மா தான் இந்த அன்புச் சுவர் பங்களிப்பு இருக்கும் என்று நினைத்தோம்.ஆனால் நேரில் சென்று பார்த்த பின் தான் நமது எண்ணம் தவறு என்று புரிந்தது.

இது ஏதோ வெட்டி வேலை என்று எண்ணாதீர். இது தேவையில் இருப்பவர்களும், அவசியம் இல்லாததால் குப்பைத் தொட்டியில் போடும் நபர்களும் நேருக்கு நேர் சந்திப்பதில்லை. அதன் காரணமாகவே ஒரு தரப்பின் தேவை மற்றொரு தரப்புக்குப் புரிவதில்லை.

இதையடுத்து, இரு தரப்பு மனிதர்களையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கும் முயற்சியே, 'அன்புச் சுவர்' திட்டம்.

இந்த சுவற்றில் ஸ்டாண்டில் பழைய சட்டை, பேன்ட், வேட்டி உள்ளிட்டவற்றை வைக்கலாம். அத்துடன், சுவரில் உள்ள தனித்தனி ஷெல்ஃபில் புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள் போன்றவற்றை வைக்கலாம். அவசியம் உள்ளவர்கள், அவர்களாகவே அதனை எடுத்துச் செல்லலாம். தேவை உள்ளவர்கள் எடுத்து செல்வதை நாம் பார்த்தோம்.

சிலருக்குப் பிறரிடம் உதவிகளைக் கேட்பதில் தயக்கம் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் எந்த நேரத்திலும் வந்து இந்தப் பொருள்களைத் தங்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.

இந்த  அன்புச் சுவர்  மூலமாக யார் பொருளை வைத்தார்கள் என்பதுவோ யார் எடுத்துச் சென்றார்கள் என்பதுவோ யாருக்குமே தெரியாது. முகம் தெரியாவரிடம் இருந்து கிடைத்த உதவி தேவையில் இருப்பவர்களை ஆறுதல் அடையச் செய்யும். அதனால் மக்கள் தாராளமாக உதவிகளைச் செய்ய முன் வரவேண்டும்.

இருப்போர் கொடுக்கவும். இல்லாதோர் எடுக்கவும் சேவை  உள்ளங்களால் தொடங்கப்பட்டுள்ள இந்த  அன்புச் சுவர் பல ஊர்களிலும் பல்கி பெருகிட வேண்டும். நாம் இந்த பதிவின் மூலம் இந்த அன்புச் சுவர்  உருவாக்க முனைந்த அனைத்து நல்லுள்ளங்களையம் வாழ்த்தி மகிழ்கின்றோம்.அன்புச் சுவரை உருவாக்கியதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக அவர்கள்  கருதாமல், அவ்வப்போது அங்கு சென்று கவனித்து வரவும் வேண்டுகோள் வைக்கின்றோம்.

மீண்டும் ஒரு முறை அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...

- அன்பால் உலகு செய்வோம்

கட்டுரை உதவி: ராகேஸ் TUT 
7904612352

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com