பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவக் கல்லூரியில் உடனடியாக இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுதா சேஷய்யன் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செவ்வாய்க்கிழமை எழுதிய கடித விவரம்:
காஞ்சிபுரம் மணமைநல்லூர் பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில சேர்ந்த மாணவர்கள் அந்தக் கல்லூரி மூடப்பட்டதால் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், பாதிக்கப்பட்ட 108 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும் 10 நாள்களுக்குள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர இடம் ஒதுக்கிட, இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு முன்மொழிவுகள் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இடம் ஒதுக்காததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக இடம் ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.