கடற்கரை பகுதிகள், ஏரிகளில் கலந்திருக்கும் நுண்ணிய நெகிழிப் பொருள்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் சார்ந்த அறிவிப்புகளை திங்கள்கிழமை வெளியிட்டு அவர் பேசியதாவது: நுண் நெகிழிப் பொருள்கள் கடல் மற்றும் நீர்நிலைப் பகுதிகளின் சூழலை பெரிதும் மாசுப்படுத்தக் கூடியவை. அப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு முதல்கட்டமாக கடற்பகுதிகளிலும், ஏரிகளிலும், கழிமுகங்களிலும் கலந்துள்ள நெகிழிப் பொருள்களை மதிப்பிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.25.40 லட்சம் செலவில் நிகழாண்டில் அத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதைத் தவிர, 32 மாவட்டங்களிலும் ரூ.64 லட்சம் செலவில் நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரங்கள் வாகனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளன.
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் 300 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.1.50 கோடி செலவில் உருப் பெருக்கி (புரொஜெக்டர்கள்) சாதனங்கள் வழங்கப்பட உள்ளன என்றார்.