சென்னை விமான நிலையத்தில் ரூ.17.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த கீதா என்பவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததைத் தொடர்ந்து கீதாவின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், அவர் எடுத்துவந்த பையில் ரூ. 17.4 லட்சம் மதிப்பிலான 515 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், இதுகுறித்து கீதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.