ஊதிய உயர்வு, பணியிட நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தர்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது, மருத்துவப் பட்டமேற்படிப்பு, உயர்சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டைத் திரும்ப கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினோம். வரும் 15-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க இருக்கிறோம்.
சுகாதாரத் துறையின் மானியக் கோரிக்கையின்போது எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்றால், வரும் 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.