சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) திறக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சி சட்டப்பேரவை மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், ராமசாமி படையாச்சியாரின் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறார்.
இதுவரை 12 உருவப்படங்கள்: தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் முதல்வர்களாக இருந்த தலைவர்களின் முழு உருவப்படங்கள் தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ளன. பேரவையில் இதுவரை மொத்தம் 11 தலைவர்களின் படங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தியடிகள் படத்தை, கடந்த 1948-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி திறந்து வைத்தார். இதேபோன்று, ராஜாஜியின் படத்தை 1948-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அப்போதைய பிரதமர் நேருவும், திருவள்ளுவர் படத்தை 1964-ஆம் ஆண்டு மார்ச் 22-இல் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜாகீர் உசேனும் திறந்து வைத்தனர்.
முன்னாள் முதல்வர்கள் அண்ணாவின் படத்தை 1969-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், காமராஜர் படத்தை 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-இல் அப்போதைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டியும், எம்.ஜி.ஆர். உருவப்படத்தை 1992-ஆம் ஆண்டு ஜனவரி 31-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் திறந்து வைத்தனர்.
முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அம்பேத்கர், காயிதே மில்லத் ஆகியோரின் உருவப்படங்களை, ஒரே நேரத்தில் கடந்த 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி அப்போதைய கேரள ஆளுநர் ஜோதி வெங்கடாசலம் திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி, பேரவைத் தலைவர் பி.தனபால் திறந்து வைத்தார்.
சட்டப்பேரவையில் இதுவரை 11 முக்கியத் தலைவர்களின் முழு உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 12-ஆவதாக சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது.