மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக, நான்கு மெட்ரோ நிலையங்களில் இருந்து 11 சிற்றுந்து சேவைகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் தடையற்ற போக்குவரத்துத் தேவைக்காக பல வசதிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் அமல்படுத்தி வருகிறது. இதனடிப்படையில், ஷேர் ஆட்டோ மற்றும் கார் சேவையும், மாநகரப் போக்குவரத்துக்கழகத்தின் சிற்றுந்து வசதியும் செய்யப்பட்டுள்ளன. தற்போது கோயம்பேடு, சென்னை புறநகர் பேருந்து நிலையம் (சி.எம்.பி.டி), வடபழனி, அசோக் நகர், ஆலந்தூர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 14 சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 11 சிற்றுந்து சேவைகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டி.எல்.எஃப் வரை 3 சிற்றுந்து சேவைகளும், எல்.ஐ.சி. மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விவேகானந்தர் இல்லம் வரை 2 சிற்றுந்து சேவைகளும், ஏஜி- டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வரை 2 சிற்றுந்துகளும் விடப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஐ.ஓ.சி. வரையும், எழும்பூர் ரயில் நிலையம் வரையும் தலா இரண்டு சிற்றுந்து சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.