சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பாறாங்கல்லை அகற்றி விபத்தை தடுத்த ரயில் ஓட்டுநருக்கு ரயில்வே காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவித்தார்.
இதுபோல, வேளச்சேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்புதுண்டுகளை அகற்றிய மற்றொரு ஓட்டுநருக்கும் பாராட்டு பத்திரம் வழங்கினார்.
சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு மின்சார ரயில் கடந்த 1-ஆம் தேதி காலை புறப்பட்டது. இந்த ரயில் கோட்டை-பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது, தண்டவாளத்தில் 25 கிலோ எடையுள்ள பாறாங்கல் இருந்தது. இதைக் கண்ட ஓட்டுநர் காமராஜ், ரயிலை நிறுத்தி, கல்லை அப்புறப்படுத்திவிட்டு அதன் பிறகு மீண்டும் ரயிலை இயக்கினார். ரயிலுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பின்றி ரயிலை இயக்கிய செயலை பாராட்டி, அவருக்கு ரயில்வே காவல்துறை துணைத் தலைவர் வி.பாலகிருஷ்ணன் பாராட்டி பத்திரம் வழங்கினார்.
இதுபோல, கடந்த 4-ஆம்தேதி வேளச்சேரி ரயில் நிலைய தண்டவாளத்தில் இரும்பு துண்டுகள் இருந்தன. இதை கண்ட ஓட்டுநர் சுரேஷ்குமார் ரயிலை நிறுத்தி, இரும்பு துண்டுகளை அப்புறப்படுத்திய பிறகு ரயிலை இயக்கினார். ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்த சுரேஷ்குமாருக்கு ரயில்வே காவல்துறை துணைத் தலைவர் பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவித்தார்.