சென்னை வேளச்சேரியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ளது வேளச்சேரி ரயில் நிலையம்.
இந்த ரயில் நிலையத்துக்கு அருகே ரயில்வே துறைக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகளைக் கட்டினர். இவற்றைதக் காலி செய்யுமாறு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பாளர்களுக்கு ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர்கள் காலி செய்ய மறுப்புத் தெரிவித்தனர்.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையே உச்சநீதிமன்றமும் உறுதி செய்து அண்மையில் உத்தரவிட்டது.
அகற்றம்: இதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் வருவாய் மற்றும் ரயில்வே துறையினர் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். ஆனால், இதற்கு அப்பகுதி மக்கள், வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டன.