சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ரூ.23 லட்சம் கையாடல் செய்ததாக பெண் கணக்காளர் கைது செய்யப்பட்டார்.
செம்மஞ்சேரி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சை.பர்கத் பானு (24). இவர் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பிரிவில் உதவிக் கணக்காளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் பர்கத் பானு, கடந்தாண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி தனது பணியை திடீரென ராஜிநாமா செய்தார். அதன் பின்னர், பர்கத் பானு வேலை செய்த பிரிவின் வரவு-செலவு கணக்குகளை அந்த பிரிவு அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.
இதில் பர்கத் பானு, ரூ.23 லட்சத்து 53,300 கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன இணை பொது மேலாளர் பார்த்திபன், கோயம்பேடு காவல் நிலையத்தில் பர்கத் பானு மீது புகார் தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் பர்கத் பானு மீது மோசடி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக பர்கத் பானு வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.