வெப்பச்சலனம் மற்றும் பருவமழை காரணமாக, தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 24) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை தீவிரம்: கடலோர கர்நாடகம், ஆந்திரா பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தற்போது தீவிரமாகியுள்ளது. மேலும், மத்திய அரபிக்கடலில் மீதமுள்ள பகுதிகள், வட அரபிக்கடலில் பல பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய சாதகமான சூழல் உள்ளது.
இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் பருவமழை காரணமாக, தமிழகத்தில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 24) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:
பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில்...: சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, நீலகிரி மாவட்டம், நடுவட்டம், தேவாலாவில் தலா 40 மி.மீ., கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை, வேலூர் மாவட்டம், மேல்,ஆலத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம், சத்யபாமாவில் தலா 30 மி.மீ., காஞ்சிபுரம், குன்றத்தூரில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.
6 இடங்களில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 6 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக, பரங்கிபேட்டையில் 103 டிகிரி வெப்பநிலை பதிவானது. திருத்தணி, வேலூரில் தலா 102 டிகிரி, மதுரை விமானநிலையம், நாகப்பட்டினத்தில் தலா 101 டிகிரி, கடலூரில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.