இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் வயது வரம்பை உயர்த்தக் கோரி திருநங்கைகள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் உள்பட 3 பேரை தேர்வில் பங்கேற்க அனுமதிக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருநங்கை தீபிகா உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான 2,465 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது.இந்த தேர்வுக்கு 26 வயதுக்குள்பட்ட திருநங்கைகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருநங்கைகளுக்கான வயது வரம்பை 26-இலிருந்து 45-ஆக உயர்த்த சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், மனுதாரர்கள் 3 பேரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அவர்களை எழுத்துத் தேர்வில் பங்கேற்க தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.