நெம்மேலியில் 20 ஏக்கர் பரப்பளவில் 15 கோடி லிட்டர் கடல் நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க மற்றொரு புதிய ஆலை தொடங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஓர் ஆலை ஏற்கெனவே செயல்பட்டுவருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் கடல் நீர் குடிநீராக சுத்திகரிக்கப்படுகிறது. தென் சென்னை பகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, திருவான்மியூர், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், பெருங்குடி, வேளச்சேரி, கொட்டிவாக்கம், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு இந்த நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வறட்சி காரணமாக தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பொதுமக்களின் கூடுதல் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு நெம்மேலியில் தற்போது உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையின் பக்கத்தில் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் புதிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆலையில் நாள்தோறும் 15 கோடி லிட்டர் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்காக, மேடுபள்ளமாக இருக்கும் 20 ஏக்கர் நிலத்தை சாலை அமைக்கும் இயந்திரம் மூலம் சமப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்தவுடன் இந்த மாத இறுதியில் ஆலையின் கட்டுமானப் பணிகளைத் தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, இந்த ஆலையில் சுத்திகரித்து வழங்கப்படும் குடிநீரை நெம்மேலி ஊராட்சிப் பகுதி மக்களுக்கு குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் காலங்களில் பகிர்ந்து அளிக்கவேண்டும் என்றும், புதிய குடிநீர் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் பொது மக்கள் சார்பில் நெம்மேலி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்
கே.இ.நாகப்பன், உள்ளாட்சித் துறை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.