சென்னையில் பெண்களிடம் தொடர்ந்து தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி சுதாதேவி, பார்த்தசாரதி கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், சுதாதேவி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதேபோல கோட்டூர்புரம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வி, தனது வீட்டின் அருகே நடந்து செல்லும்போது அங்கு வந்த அதே நபர்கள் அவரை தாக்கி தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர்.
மேலும் அந்த நபர்கள், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா 2-ஆவது தெருவைச் சேர்ந்த சாந்தாவிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். பள்ளிக்கரணை அருகே உள்ள பெரும்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்த பாலம்மாளிடம், அந்த நபர்கள் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனர்.
இவ்வாறு ஆதம்பாக்கம், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை என மொத்தம் 9 இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் அந்தக் கும்பல் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கடந்த 22-ஆம் தேதி மயிலாப்பூரில் திருடப்பட்டதும், மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து தங்கச் சங்கிலியை பறிப்பது எஸ்.எம்.
நகர் பல்லவன் சாலைப் பகுதியைச் சேர்ந்த ம.ராகேஷ் (21) என்பதும், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வது அண்டா சீனு என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் ராகேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அண்டா சீனுவை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ராகேஷ் மீது இரு கொலை வழக்குகள் உள்பட 9 வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த ராகேஷ் கடந்த வாரம்தான் பிணையில் வெளியே வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் திருட்டு: இதேபோல, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் செல்லிடப்பேசி, பணம் திருடியதாக, புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முகம்மது சமீர் பாட்ஷாவை (30) போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.