உலக செவித்திறன் தினத்தையொட்டி, போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்வி நிறுவன மருத்துவமனையில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சிலருக்கு இலவச செவித்திறன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து, ராமச்சந்திரா மருத்துவக் கல்வி நிறுவனத்தின் கேட்பியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் ஹேரம்ப கணபதி கூறியதாவது: உலக சுகாதார அமைப்பு (டபிள்யு.ஹெச்.ஓ) மார்ச் 3-ஆம் தேதியை சர்வதேச செவித்திறன் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அதையொட்டி, விழிப்புணர்வு கண்காட்சியையும், நிகழ்ச்சிகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மருத்துவமனை வளாகத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெறும். வரும் வெள்ளிக்கிழமை வரை இலவச செவித்திறன் பரிசோதனைகளும் நடத்தப்பட உள்ளன. அதற்கு உரிய முன்பதிவு அவசியம். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன என்றார் அவர்.