மெட்ரோ ரயில் 2-ஆவது திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 04th March 2019 04:07 AM | Last Updated : 04th March 2019 04:07 AM | அ+அ அ- |

கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.
சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிந்து இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான விரிவாக்கப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டம் ரூ.79,961 கோடி மதிப்பீட்டில் மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ.க்கு ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. மாதவரம்-சிறுசேரி சிப்காட் (45.9 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூர் (47 கி.மீ.), கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி( 26.1 கி.மீ) ஆகிய பாதைகள் இந்தத் திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ளன.மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணியானது கடந்த ஆண்டு தொடங்கியது. மெட்ரோ ரயில் வழித்தடங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மெட்ரோ ரயில் விரிவாக்க பணிக்காக இடங்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, பூந்தமல்லி மெட்ரோ பணிமனை முதல் போரூர் வழியாக வடபழனி வரை மெட்ரோ ரயில் வழி தடத்தில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே 30 நிலையங்கள் அமைய இருக்கின்றன. இதன்காரணமாக, பூந்தமல்லி மெட்ரோ பணிமனை முதல் போரூர் வழியாக வடபழனி வரை உள்ள நிலையங்களுக்கான இடம் கையகப்படுத்துவதற்கு 221 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட நில எடுப்பு அலுவலர் அலுவலகத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராகி ஆவணங்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு வரைபடம் வெளியீடு: மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில் முதல்கட்டமாக மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-கோயம்பேடு இடையே 52.1 கி.மீ. பாதைகள் அமைக்கப்படவுள்ளன. இரண்டாவது திட்டத்துக்கான பாதைகள் அமைக்க, முழுமையான வரைபடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்டது.