சென்னை மெரீனாவில் மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது தப்பிய பெண், கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மெரீனா கடற்கரைக்கு புதன்கிழமை வந்தார். அங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்குப் பின்புறம் அமர்ந்து அந்தப் பெண் கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாராம். அந்த நேரத்தில் அங்கு வந்த 4 பேர் அந்தப் பெண்ணை திடீரென பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
இதில் அந்த நபர்கள் பலமாக ஒரு கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அங்கேயே அந்தப் பெண் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அந்த நபர்கள், அங்கிருந்து தப்பியோடினர். இதற்கிடையே சிறிது நேரத்துக்குப் பின்னர் மயக்கத்தில் இருந்து எழுந்த அந்தப் பெண், கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த அங்கிருந்த மீனவர்கள், அந்தப் பெண்ணை அங்கிருந்து மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக அந்தப் பெண்ணை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.