அரசு மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பு பயிற்சி வகுப்புகளும், பயிலரங்கமும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மூன்று நாள்கள் நடைபெறும் இப்பயிலரங்கை, மாநில சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் பீலா ராஜேஷ் தொடங்கி வைத்தார்.
தரமான சிகிச்சையையும், மருத்துவ சேவைகளையும் வழங்குவது தொடர்பாகவும், மருத்துவமனையின் புறச்சூழலை மேம்படுத்துவது தொடர்பாகவும், இப் பயிலரங்கில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன. மருத்துவக் கல்வி இயக்குநரகம், தேசிய நல்வாழ்வு குழுமம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், தனியார் அமைப்புகளும் இப்பயிலரங்கை நடத்துகின்றன. தொடக்க நிகழ்ச்சியில், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் டாக்டர் வசந்தாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இப் பயிலரங்கில், மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ப 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.