சென்னை பர்மா பஜாரில் உள்ள இசைப் பொருள்கள் விற்பனைக் கடையில் ரூ. 45 லட்சம் திருடியதாக அக்கடையின் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை பர்மா பஜார் பகுதியில் அந்தோணி (42) என்பவர் இசைப் பொருள்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார்.
இந்தக் கடையில் திருச்சியைச் சேர்ந்த சங்கர் (29) வேலை செய்து வந்தார். சங்கர் திடீரென அந்தக் கடையிலிருந்து வேலையை விட்டு நின்றுள்ளார். இதனால், சந்தேகமடைந்த அந்தோணி கடையின் சரக்கு இருப்பையும், வரவு-செலவு கணக்கையும் சரிபார்த்துள்ளார்.
அதில் கடையில் இருந்து ரூ.45 லட்சம் சிறிது, சிறிதாக திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அந்தோணி புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்ததில், சங்கர் ரூ. 45 லட்சம் திருடியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.